உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் அதிக சொத்துக்கள் உள்ளவர்கள் பெயர் வெளியிடப்படுகிறது. இதில் 2ம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலகில் அதிக சொத்து கொண்ட இரண்டாவது பணக்காரர் என்ற பட்டியலில் பில்கேட்ஸை பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதனால் 3ம் இடத்திற்கு சென்றுள்ளார் பில்கேட்ஸ். இவர் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக கொடுத்ததால் இந்த சரிவை சந்தித்துள்ளார்.
உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்தார் பில்கேட்ஸ். அவரை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். இதனால் பட்டியல் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த பில்கேட்சுக்கு இப்போது அடுத்த சரிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் எல்விஎம்ஹெச் என்ற நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் தனது கூடுதல் சொத்துக்களால் 2-ம் இடத்தில் இருந்த பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தை பிடித்துள்ளார். ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடம் வகிக்கிறார். இதற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் உள்ளார்.
107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளார். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.